நுகர்வோர் அமைப்பு போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!
திருப்பூரில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அனைத்து சிக்னல் விளம்பர பலகைகளையும் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக அகற்றும் என உறுதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நுகர்வோர் அமைப்பினர் நாளை நடத்தவிருந்த நேரடி அகற்றும் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், சாலைகளின் சென்டர் மீடியன் மற்றும் டிராபிக் சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்கக்கூடாது என சென்னை தலைமைப் பொறியாளர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால், 13-ம் தேதி முதல் நுகர்வோர் அமைப்பே களமிறங்கி அவற்றை அகற்றும் என போலீசாரிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோட்ட செயற்பொறியாளர் மற்றும் உப கோட்ட செயற்பொறியாளர் ஆகியோர் விதிமீறிய விளம்பர பலகைகளை முழுமையாக அகற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த அதிகாரப்பூர்வ உறுதியை ஏற்று, நுகர்வோர் அமைப்பினர் தங்களின் போராட்ட முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
