பெருநகர சென்னை மாநகராட்சி
செய்தி வெளியீடு
செ.வெ.எண். 81 நாள் : 29.03.2020 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதிசெய்யப்பட்ட 15 நபர்களின் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், .இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த 15 நபர்கள் தற்பொழுது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நபர்களின் வீடுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மற்றவர்களுக்கு தொற்று பராமல் தடுக்கும் வகையில் சுற்றியுள்ள 2,500 வீடுகள் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்காக மாநகராட்சியின் சார்பில் 15 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் இன்று காலை முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட 15 நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இதற்காக மாநகராட்சியின் சார்பில் 2,500 வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்யும் ( DBC ) பணியாளர்கள், 1,500 அங்கன்வாடி பணியாளர்கள், 1,500 ஆசிரியர்கள் மற்றும் 750 சுகாதார செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பகுதிகளை சார்ந்த மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முக்கிய தேவைகளை தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை சுகாதார பணியாளர்கள் மற்றும் வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்யும் ( DBC ) பணியாளர்களை கொண்டு தொடர்ந்து 28 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதே போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து சென்னை திரும்பிய 20,240 நபர்களில் 19,120 நபர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் இவர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி.