ஈரோடு: காதல் ஜோடியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டை சேர்ந்தவர் ஹேமலதா, 19; இவருடன் கல்லூரியில் படித்த, முகாசிபிடாரியூரை சேர்ந்த பாலாஜி, 21, என்பவரை, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி, சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்தார். இதையறிந்த தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர் யுவராஜ் உட்பட மூன்று பேர், காதல் ஜோடியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டினர். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து, யுவராஜ் உட்பட மூவரை கைது செய்தனர். ஈரோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடக்கிறது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். நீதிபதி சாந்தி விசாரித்து, ஜூலை, 15ல் யுவராஜை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். மீண்டும் அவர் திருச்சி சிறைக்கு, கொண்டு செல்லப்பட்டார்.