கரிஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார்: இணை அமைச்சர் திருமதி ஷோபா கரன்லாஜே

 

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரன்லாஜே புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நீட்டிப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவிப்பார் என கூறினார்.

 

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவது இம்மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் போதிய உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். உணவு பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய ஏதுவாக, மற்ற நலத்திட்டங்களின் கீழ் வழங்க தேவையான உணவு தானியங்களும் கையிருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

கடந்த 28மாதங்களில் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 1.80 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்கொண்ட கடும் வறட்சி மற்றும் பருவ மாறுபாடு காரணமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றின் உற்பத்தி குறைந்த போதிலும், ஏழைகள் நலவாழ்வுத்திட்டத்தில் தொடர்ந்து உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருவதையும் திருமதி ஷோபா கரன்லாஜே சுட்டிக்காட்டினார்.

 

பொதுவிநியோகத் திட்டத்தை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உணவு தானியங்களின் கழிவுகளை ஆய்வு செய்யவும், கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களுக்கான ஆதரவு விலையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறு தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் திருமதி ஷோபா கரன்லாஜே தெரிவித்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *