ஒரு நபர் ஆணைய அறிக்கையை எற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வழி வகை செய்ய வேண்டும் என ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை!
ஒரு நபர் ஆணைய அறிக்கையை எற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வழி வகை செய்ய வேண்டும் என ஆலைக்கு ஆதரவான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு தலைவர் தியாகராஜன் செயலாளர். கணேசன், துணைத் தலைவர் கல்லை ஜிந்தா மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முருகன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஒப்பந்ததாரர் லக்ஷ்மணன் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கூறுகையில் தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இந்த அசம்பாவிதங்களுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை கமிட்டி, மிக தெளிவாக விளக்கி உள்ளது. இது தொடர்பான உண்மை தன்மையை உலகறிய செய்த நீதியரசர் அவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை தன்மை இவ்வாறு இருக்க, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் என்ற மாய தோற்றத்தில் இருக்கக்கூடிய சில நபர்கள் தொடர்ந்து இந்த ஆலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவதூறு பரப்பினவர்கள், பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர் சொன்னது போன்று, காற்று மாசு ஏற்படவில்லை என்பது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் காற்று மாசுபாட்டுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பது இந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் காற்று மாசுபடுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் சமீபத்திய (RTI) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையில் தூத்துக்குடி காற்று மாசுபாட்டிற்கும் புற்று நோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஆனது தூத்துக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குனரால் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே அரசு, அவதூறு பரப்பினவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று கூறினர்.