சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகிறது யோகா என்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) வளாகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர், நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது என்றார். பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோயில் பின்னணியில் பெரும் திரளான மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
யோகாவை உடற்பயிற்சியாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளிவை ஏற்படுத்தவும் யோகா பயன்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய பயன்படுவது யோகா என்றும் அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறினார்.
சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு முன்முயற்சி மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி சார்பில் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், நமது நாட்டின் பெருமை மிகுந்த தொன்மையான பண்பாட்டை வெளிப்படுத்தும் யோகா இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம் கிருஷ்ணன், உணவு பதன தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம் லோகநாதன், கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் யோகாச்சாரியார் எஸ் ஸ்ரீதரன், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையாளர் டாக்டர் ராமகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.