கோவை போத்தனூர் – பொள்ளாச்சி – பழனி இடையே மீண்டும் ரயில்கள் இயக்கம்
மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் நன்றி
கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வழியாக பழநி வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06463) சேவை இன்று (10-11-2021) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று மதியம் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் நான் பங்கேற்று கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தேன்.
கோவையில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.40 மணிக்கு அதாவது 2 மணி 30 நிமிடங்களில் பழநி சென்றடையும். ரூ. 55 கட்டணத்தில் பாதுகாப்பாக, குறைந்த நேரத்தில் பொதுமக்கள் இனி பயணம் செய்ய முடியும்.
இன்று (10-11-2021, புதன்கிழமை) முதல் பழநியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06479) இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வழியாக பழநி வருபவர்கள் இந்த ரயிலில் மதுரைக்கு இனி பயணம் செய்யலாம்.
இந்த ரயில்கள் மூலம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கும், பழநியிலிருந்து செல்லும் இணைப்பு ரயில் மூலம் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கும் பொதுமக்கள் குறைந்த செலவில் ஆன்மிகப் பயணம் செல்ல முடியும்.
அதுபோல ஆழியாறு, பரம்பிக்குளம், திருமூர்த்தி அணை, மதுரையில் இருந்து கொடைக்கானல், மூணாறு ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கும் செல்லவும் இந்த ரயில் இனி பயன்படும்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான எனது தொகுதி கோரிக்கையை ஏற்றும், பாஜக மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும் இந்த வழித் தடங்களில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவையை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு எனது சார்பிலும் , பாஜக சார்பிலும், கொங்கு மண்டல மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.