ஆர்.கே நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (வடக்கு) அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இன்று (09.10.2021) காலை சுமார் 10.45 மணியளவில் தண்டையார்பேட்டை, IOC பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்த முற்பட்டபோது, இருவரும் தப்பியோடவே, காவல் குழுவினர் உடனே துரத்திச் சென்று ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்த முகமது உசேன், வ/36, த/பெ.சையது இப்ராகிம், எண்.13/37, 3வது தெரு, சஞ்சய் காந்தி நகர், தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான கவியரசு என்பவரை பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகமது உசேன், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.